பிரிவும் பிளவும்

மனிதரில் பிரிவுகள் ஏன்?

எல்லாம் வல்ல இறைவன் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா (அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்ட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பற்பல மதங்களிலும் பற்பல பிரிவுகள் – பிளவுகள் – வேற்றுமைகள். மனிதர்களில் இந்த பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படக் அடிப்படைக் காரணம் என்ன?

ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்.
நாம் சொன்னோம்: :நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:38,39)

ஆதம் (அலை) அவர்களை வானவர்களைவிடவும் உயர்ந்தவர்களாக சிறப்பித்துக் காட்டினான். அப்படிப்பட்ட ஒரு நபியை தன் சொந்த அபிப்பிராயப்படி செயல்படக்கூடாது எனவும் எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைக்கு மாறு செய்தால் அடையப்போவது மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்கிறான். அல்லாஹ்வுடைய வஹி மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால் மற்ற மனிதர்களின் நிலைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும் சொந்த அபிப்பிராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்கு பிடித்தமான செயல் என்று நம்பியே செயல்படுகிறான். இதற்குக் காரணம் மனிதனை வழிகெடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தான் மனிதனது உள்ளத்தில் நல்லதைப் போன்று தீமையைப் புகுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்குக் கொண்டு சேர்த்து விடுகிறான். இதனை:

செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:103,104)
ஷைத்தான் எவ்வாறு இந்நிலையை உருவாக்குகிறான்?

மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்ப வைத்து அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்த சென்ற முன்னோர்களையும் மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான். இதனை சாதாரணமாகப் படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழியை நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும்.

நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் நேர்வழி அறிந்து நடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம்பெற்று விடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்துச் செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம் அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கிறான். அந்த முயற்சியில் ஈடுபட்டுச் சரியாக நடந்தால் இரண்டு நன்மைகள். முயற்சியில் ஈடுபட்டுப் பின் தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்க மாட்டான்.

இறைவன் கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். வசனம் 2:38ன் படி இறைவன் கொடுத்த நேர்வழியை அறிய முயற்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து “உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வெறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 7:3) என்ற இறை வசனத்தை பொய்யாக்கி முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களைப் பின்பற்றுவதைக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது மூன்றாவது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிகேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக:

மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்”  என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)

இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானுக்கு இரண்டு வித வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்கின்றன. மனிதர்கள் அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக்கட்டி அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழி தவறிச் செல்லச் செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் சென்று அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும் போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்;

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”(என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)

இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வரவேண்டும்.

கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்!

“எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105) 

தூய இஸ்லாத்தை கருத்து வேறுபாட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கும் திருப்பணியைத் தொடர்ந்து வரும் மார்க்கம் கற்றோரே (ஆலிம்களே)! நீங்கள் கற்றது உண்மையான இஸ்லாமிய கல்வியயன்றால் உங்களிடம் ஏனித்தனை வன்மம்? மற்றவர்களுக்குப் பிரச்சனையேற்பட்டால் தீர்த்து வைக்கும் பொறுப்பேற்ற நீங்கள் இன்று சமுதாயத்திற்குப் பெரும் பிரச்சனையாகி விட்டீர்களே…. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய நீங்கள்! இன்று வேற்றுமையையல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! 

நீதியின் அரியாசனத்தை அலங்கரிக்க வேண்டியவர்கள் குற்றவாளிக் கூண்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் கொடுமை உங்களுக்கு இதமாகவா இருக்கிறது? சமுதாயத்தில் ஒருவர் கூடவா இதன் கடமையை இன்னும் உணராமலிக்கிறீர்கள்? உணர்ந்தோர் ஒரு சிலரும்-உணர்த்த முற்படாமல் நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கியிருக்கிறீர்கள். 

மார்க்கம் கற்றவர்களே! சற்று சிந்தியுங்கள்-பொறுமையாக….!
நீங்கள் முட்டி மோதி பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இழுக்கு-உங்களோடு மட்டும் ஒழியவில்லை. மாறாக அந்த அழுக்கு-இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதை நீங்கள் அறியவில்லையா?  நீங்கள் கற்றது உண்மையில் தீனுல் இஸ்லாம் ஒன்றேயெனில் நீங்கள் பல்வேறு பிரிவுகளாய் செயல்படுவதேன்? 

உங்களுடைய கருத்து வேறுபாடு-சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதும் நீங்கள் அறியாததல்ல.
சமுதாயம் சிதறினால்தான் உங்கள் பிழைப்பை வெற்றிகரமாய் தொடர முடியும் என்ற வரட்டு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அறிஞர்கள் என்ற பட்டயத்திற்கு சொந்தம் கொண்டாடும் நீங்கள் அறிவிலிகளாக மாறிக் கொண்டிருப்பதை அறியவில்லையா? சிறு-சிறு சில்லறை விஷயங்களில் வேறு பட்டாலே சிதறும் சமுதாயத்தை இன்று மூலக் கொள்கைகளில் மோதலையேற்படுத்தி அதிர வைத்துக் கொண்டிருக்கிறீர்களே? நியாயம்தானா? அறியாத மக்கள் உண்மை புரிய உழைக்க வேண்டிய நீங்கள் அந்த மக்களைக் குழப்பத்திலாழ்த்தி அலைக்கழிக்கலாமா? 

நாங்கள் மற்றதெல்லாம் கற்றோம். மார்க்கத்தைக் கற்கவில்லை. எல்லோருக்கும் பொதுவுடமையாக வேண்டிய இஸ்லாமியக் கல்வியை உங்களுக்கு மட்டும் தனியுடமையாக்கியது மட்டுமே நாங்கள் செய்த தவறு…! இமாலயத் தவறு! ஒப்புக் கொள்கிறோம் இப்போது காலம் கடந்தாவது. அதற்காக நீங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அப்பாவி மக்களை உங்கள் மோதலுக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்களே! 

ஓ! எத்துணை கொடூர தண்டனை!
அன்று! இறைத் தூதர்(ஸல்) அவர்கள் அந்த காரத்தில் மூழ்கிக் கிடந்த அப்பாவி மக்களுக்கு அறிவொளியல்லவா பாய்ச்சினார்கள். ஆனால் நீங்கள் இன்று! இறை வாக்கிற்கு முரண்பட்டாலும் உங்கள் வாக்கை வேதவாக்கென்றும்… 

நபி வழிக்கு மாற்றமாய் நீங்கள் நடைபோட்டாலும் உங்கள் வழியே நபி வழியென்றும் அப்பட்டமாய் நம்பும் அப்பாவி மக்கள்!
ஓ..! இந்த சமுதாய மக்களுக்கு உங்கள் மேல் எத்தனை நம்பிக்கை! உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை!
நீங்கள் தவறிழைக்க மாட்டீர்கள்!
நீங்கள் தவறுரைக்க மாட்டீர்கள்! 

உங்களிடம் அல்லாஹ்மேல் ஆணையிட்டுக் கேட்கிறோம்! நீங்கள் இந்த நம்பிக்கைக்கு உரித்தானவர்கள்தானா…?
உங்கள் நடவடிக்கைகள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து கொண்டிருக்கின்றன; இதை நீங்கள் நன்கறிந்திருந்தும் அறியாதோர் போல் வாளாவிருக் கின்றீர்களே….! 

“”ஏன் திருடினாய் உன் எஜமானர் உன் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த நிலையில்?” என்று குற்றவாளிக் கூண்டிலேற்றப்பட்ட திருடனி டம் நீதிபதி வினவியபோது… 

“அப்படியொரு நம்பிக்கை வைத்ததால் தான் என்னால் திருட முடிந்தது’ என்று திருடன் தன் தவறை நியாயப்படுத்திய சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. 

உங்கள் மேல் நாங்கள் காட்டும் அபரிமித மரியாதையும், மார்க்கத்தைச் சரியாக உணர்ந்தவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்…எங்கள் மீது எதையும் திணித்து விடலாம்! நீங்கள் கூறும், எழுதும் எதையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்றிடுவோம்! என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டு விட்டது. 

மக்கள் அறியாமையால் ஏமாறுகிறார்கள், எப் படி வேண்டுமானாலும் அவர்களை ஏமாற்றலாம்.காட்டுவோம் கைவரிசையை.. என்று மார்க்கம் குறித்து எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம்; விளக்கலாம் என்று மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்களே…! நியாயம் தானா? 

மார்க்கம் கற்றவர்கள் அனைவரும்-எல்லா வகை விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட-அப்பழுக்கற்றவர்கள், என்ற தப்பான எண்ணத்தை மக்களின் மனதில் பதித்து-நீங்கள் செய்து வரும் தவறுகளை வெகு சாமர்த்தியமாக மறைத்து வெற்றிகரமாய் உங்கள் பிழைப்பைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டு வருகிறீர்கள். 

நீங்கள் இஸ்லாமியக் கொள்கைக் கோட்டையைத் தகர்க்கும் நேரங்களில்-அதைத் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினாலும்-எடுத்துக் காட்டிய வரை எதிரியாகப் பாவித்து-அவர்மீது வீண்பழி சுமத்தி மக்கள் முன் குற்றவாளியாக்கி-உங்கள் தவறை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களேயன்றி, தவறை தவறென்றுணர்ந்து திருந்த முன் வருவோர். (அரிதிலும் அரிது) விரல் விட்டெண்ணுமளவே…! 

…நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கவும், சத்தியத்தை அசத்தியத்தைக் கொண்டு கலக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42) 

ஒன்றே தெய்வம்-அல்லாஹ்…!
ஒன்றே நமது நெறிநூல்… அல்குர்ஆன்…!
நமது வழிகாட்டியும் ஒருவரே… இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே…!
இவை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் முழக்கத்திற்குரிய தத்துவமாய் மாற்றப்பட்டு விட்டனவேயன்றி… இன்று இஸ்லாத்தின் பெயரால் உங்கட்கிடையே எண்ணிலடங்கா கொள்கை வேறுபாடுகள் நாளும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த வேறுபாடுகள்…? எப்படி யாரால் இந்த வேறுபாடுகள் எழுகின்றன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? 

இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் … மார்க்கம் கற்றவருக்கு… மார்க்கம் கற்றவர் மாறுபடுவதேன்?
ஒரே விஷயத்திற்குப் பல்வேறு மாறுபட்ட .. ஒன்றிற்கொன்று முற்றிலும் முரண்பட்ட விளக்கங்கள்….!
ஆளுக்கொரு கொள்கை…!
வேளைக்கொரு ஃபத்வா…!
நாளுக்கொரு கருத்து…! 

ஒரே மதரஸாவில் ஒன்றாக ஓதி… ஒன்றாக தஹ்ஸீல் (பட்டம்) ஆகி… அதே மதரஸாவில் ஒன்றாகப் பணி புரியும் இரு பேராசிரியர்கள்…! இஸ்லாமியக் கொள்கை சம்மந்தப்பட்ட எந்த விஷயமானாலும் சரி…ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்ததில்லை. மக்கள் இருவரிடமும் அபிமானம் பூண்டவர்கள்! ஒருவருக்கு இருவரிடம் கேட்டு விஷயத்தை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு…! ஒரே விஷயத்திற்கு இருவரும் கொடுக்கும் மாறுபட்ட விளக்கங்கள்…! இருவரும் தத்தமது கூற்றே சரியயன வாதித்து விளக்கம் கேட்க வந்தவரை, அப்பாவியைக் குழப்பத்திலாழ்த்திவிடுவர். 

ஏன் விளக்கம் பெற வந்தோம்…! விளக்கத்திற்கு பகரமாய் குழப்பமல்லவா எமக்குப் பரிசாய் கிடைத்திருக்கிறது! ஏமாற்றம். இறுதியில் மிஞ்சுவது வேதனை! எதைத் தெரிய விழைந்தாலும் குழப்பம் தான்! ஏனிப்படி…? இது விளக்குபவர் குறை என்பதை உணராத மக்கள்-இஸ்லாத்தில் எதற்கும் தெளி வில்லை போல் தெரிகிறது! மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள் நிலையே இதுவெனில் ஒன்று மறியாத நாம் எப்படி உண்மையை உணர முடியும்…? குழப்பம் நிறைந்த விஷயங்களில் ஒளிந்திருக்கும் உண்மையை எந்த அளவு கோலைக் கொண்டு பாகுபடுத்தி உண்மையை உணர்வது…? நமக்கேன் இந்த வேண்டாத வேலை…? இறையருளிய எளிய இனிய மார்க்கம், பாமர மக்கள் முன் பூதகரமாய், கடுமையாய், சிக்கல் நிறைந்த தாய் சித்தரிக்கப்படுவதால், மக்கள் மார்க்கத்தை அறிவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டு வருகிறார்கள் பல இடங்களில்…. 

ஒரு ஊரின் நிலைதானிப்படி…! மற்ற ஊர்களில் இந்த நிலையிருக்காது என்று அங்குள்ளோரை அணுகினாலும் எங்கும் இதே நிலைதான் நீடிக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மை. நாடெங்கிலும் இதே நிலை தான்… இன்றளவும்.
மதரஸாக்களில் வெளியாகும் ஃபத்வா (மார்க் கத் தீர்ப்புகள்) மவ்லவிகள், மவ்லவிகள் அல்லாதார் வெளியிடும் கருத்துக்கள்: மேடைகளில் முழக்கம் செய்யப்படும் இஸ்லாமியக் கருத்துக்கள் இவையனைத்தும் ஒன்றிற்கொன்று முரணாகவோ அல்லது சில்லறை அபிப்பிராய பேதங்களை உண்டாக்குகிறதேயன்றி ஒருமித்தக் கருத்தை உருவாக்க உதவவில்லை. 

இதனால் இன்று நம் சமுதாயத்தில் பல்வேறு கொள்கைப் பிரிவுகள் பல்வேறு பெயர்களில் உருவாகி வருகிறது. ஒரே கொள்கைப் பிரிவார் மற்றொரு கொள்கைப் பிரிவாரை எதிரியாக-விரோதியாக பாவிக்கும் சூழ்நிலையும் கருக் கொண்டுள்ளது. ஆங்காங்கே தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த மாய் பலியாகிக் கொண்டிருப்பது மார்க்கமறியா மக்கள் கூட்டம்தான். மார்க்கம் கற்றவர்களால் உருவாக்கப்படும் கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு முக்கியக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. 

இதைத் தடுத்து நிறுத்த சமுதாயம் முழுமையும் ஒட்டுமொத்தமாய்-முழு மூச்சுடன்-போர்க்கால அவசரத்துடன் இயங்க முன்வர வேண்டும். குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல் பட வேண்டும். மாற்றான் நமது ஷரீஅத்தில் சிறு மாறுதல் செய்ய முனைந்தபோது ஒன்றுபட்டு வெற்றி கண்டதுபோல்… நமது மார்க்கம் கற்றோரே… இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரட்ட முனைந்திருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில்… நாம் இன்னும் அதிவேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டு….
இறையருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஒன்றே என்று உலகிற்கு உணர்த்தக் கடமைப் பட்டுள்ளோம். 

“மேலும் நீங்கள் அனைவரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடவும் வேண்டாம்.” (அல்குர்ஆன் 3:103) 

முஹிப்புல் இஸ்லாம் 

பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்

(இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ-அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க் கமாக்கியிருக்கின்றான்.  (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இமாஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளயாக) அறிவுறுத்தியதும், (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என்பதுதான்.
 
 இணை வைப்போரை எதன்(இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ-அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். அல்குர்ஆன்: 42:13.
 
 பிரிவுகளின் விபரீதங்கள்:
கடந்த 1000 ஆண்டுகளாய் முஸ்லிம்கள் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள், பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள் பிரிவுகள் பெயரால் மாபாதகங்கள் பிரிவுகள் பெயரால் வழிகேடுகள்…. பிரிவுளால் முஸ்லிம்களுக்குள் மோதல்கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள், பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் அளவிட இயலாது சொல்லியும் மாளாது எழுத்திலும் வடிக்க முடியாது. எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.
 
 ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்து வருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழியே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தியமே இல்லாததா?- மனிதநேய விரும்பிகளின் ஏக்கம் விரிந்து செல்கிறது. இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. வேதனைக்குரிய கசப்பான உண்மை. பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப்படுகின்றன. விட்டில்களாய் பிரிவுகளில் விழுந்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
 பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம். இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை. முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம். இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படவும் இல்லை. பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உண ர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக்கோரே முஸ்லிம்கள் – என்ன செய்கிறார்கள்?
 
 ஏதேனும் ஒரு பிரிவைச் சார்ந்து இருப்பதே சாலச் சிறந்தது என்ற தவறான முடிவில் இருக்கிறார்கள். இன்றைய முஸ்லிம்கள் பிரிவுகளால் விளையும் விபரீதங்களைக் கண்ணாரக் கண்டும், சுயமே அனுபவித்தும் பிரிவுகளின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் விடுபடவில்லை. விடுபட முயல்வோரும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குத் தாவி விடுகிறார்கள். பிரிவுகளின் கொடூரப் பிடியிலிருந்து யாராலும் முற்றாக விடுபட முடியவில்லை.
 
 பிரிவுத் தாவல்:
அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரிவில் அதிருப்தி ஏற்படும்போது அடுத்த பிரிவுக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளையும் தோற்கடித்து வருகிறார்கள். ஆம்! அந்த அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரிதமாய் அதிவேகமாய்.
 
  ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு
 
  ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு
 
  ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு
 
  ஒரு இயக்கம் விட்டு அடுத்த இயக்கத்துக்கு
 
  ஒரு ஜமாஅத்தை விடுத்து அடுத்த ஜமாஅத்திற்கு என
 
  பிரிதல், பிரித்தல்
 
 பிளவுபடல், பிளவு படுத்துதல்
 
 வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது. பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் சொல்லியும் மாளாது எழுதினும் ஓயாது.
 
 இதனால் முஸ்லிம்கள் மாற்றார்களின் இழி சொல்லிலிருந்தும், பழி சொல்லிலிருந்தும் தப்பமுடியவில்லை. தவறிழைக்கும் முஸ்லிம்களுக்கு இது தேவைதான். இருந்தும் முஸ்லிம்களுக்கு இன்னும் ரோஷம் பிறக்கவில்லை. இழித்தலும் பழித்தலும் முஸ்லிம்களோடு நிற்கவில்லை. முஸ்லிம்கள் மீது பாய்ந்து வரும் கண்டனங்களும், விமர்சனங்களும் அதைவிட வேகமாய் இஸ்லாத்தின் மீது பாய்ந்து வருகிறதே! முஸ்லிம்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பலியாக்கப்படுகிறதே! முஸ்லிம் பொதுமக்களே! இஸ்லாத்தின் மீது இத்தகைய பழி சுமத்தப்பட்டுள்ளது? கவனித்தீர்களா? இதுபோன்ற பழிகளுக்கும், இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நிச்சயம் இல்லை.
 
 எனதருமை முஸ்லிம் பொதுமக்களே! சிந்திக்க வேண்டாமா? இஸ்லாத்திற்கு நற் பெயரைத் தேடித்தர வேண்டிய முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளாய் மாறியதால், அவப்பெயரை அள்ளி, அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரிவினைவாதிகளால் வரிந்து திணிக்கப்பட்ட பிரிவினை இஸ்லாத்துக்கு இழுக்கைத் தேடித்தருகிறது என்றால்…..பிரிவினைவாதிகளே! இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கம் சாதரணமானதா? இதுபோன்ற பழிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
 
 பிரிவுகளின் எதிர்வினை:
பிரிவுக்கும் பிளவுக்கும் முற்றுப்புள்ளியான இஸ்லாம் பிரிவினைவாதிகளின் தவறுக்கு எவ்வாறு பொறுப்பேற்கும்? பிரிவினைவாதிகள் உங்களால் ஏற்பட்ட பழியை நீங்கள் தான் துடைத்தெறிய வேண்டும். நீங்கள் ஏற்றிருக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி இஸ்லாத்துக்கு நீங்கள் நற்பெயரைத் தேடித் தராவிட்டாலும் பரவாயில்லை. அவப்பெயரைத் தேடித்தராமல் இருக்க வேண்டும். அப்போது தான் பிரிவினைவாதிகளான போலி முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாய் உயர்வடைய முடியும்.
 
 அறிஞர்கள், தத்துவ ஞானிகள் உதிர்த்த தத்துவங்கள், சித்தார்த்தங்கள் எதுவும் மானுடத்தை ஒன்றுபடுத்தவில்லை ஒன்றுபடுத்தவும் முடியாது. மாறாக மனிதர்களைப் பிரிவுகளாக்கின. பிரிவுகளாக்கியும் வருகின்றன குழுக்களாகவும், அணிகளாகவும் பிரித்தன பிரித்தும் வருகின்றன.
 
 பிரிவுகளாலும், பிளவுகளாலும் விளையும் அத்துணை விபரீதங்களையும், மாபாதகங்க ளையும் மனிதர்கள் சந்தித்தார்கள்ள சந்தித்தும் வருகிறார்கள். (பிரிவுகளில் சிக்கி பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களும் இதிலிருந்து விடுபடவில்லை விடுபடவும் முடிய வில்லை)
 
 மானுட அமைதி, மானுட ஒருமைப்பாடு, மானுட சமத்துவம் பிரிவுகளாலும் அணிகளாலும் அடித்துச் செல்லப்படுகின்றன. பிரிவினைத்துயர் மனிதர்களை வாட்டியெடுத்து வருகிறது பிரிவுகளின் உடும்பு பிடியிலிருந்து விடுபடும் வழியறியாது மனிதர்கள் தவித்தார்கள் தவிக்கிறார்கள். நபித்துவத்துக்கு முன் அரபகத்தின் நிலை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் அணிகளாகவும், குழுக்களாக்களாகவும் பிளவு பட்டிருந்தார்கள். மனிதர்கள்-மதம், நாடு, மொழி, இனம், நிறம், குலம்… இத்யாதி-இத்யாதி-என பிரிவிலும், பிளவிலும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளக்கப்பட்டிருந்தார்கள்
 
 இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைத்தின் படைப்பாளன்-வல்லவன் அல்லாஹ் இஸ்லாத்தை நிறைவு செய்ய நாடினான். நபி(ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக தெரிவு செய்தான். நபி(ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் இறுதி நெறிநூலாய்; அருளப்பட்டது.
  
 இணைப்புப் பாலம்:
 அனைத்து இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கினான். இறைதூதர்கள் அனைவரும் இஸ்லாத்தோடு எப்படி ஐக்கியமானார்கள்? என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பதிவு செய்துள்ளான். இஸ்லாத்தை நிலைநிறுத்துவதே ஒற்றுமை. இஸ்லாத்தை நிலை நாட்டாமல் இருப்பதும் பிரிவுதான். இஸ்லாத்தை நிலைநாட்டுவதிலிருந்து பிரிந்துவிடக் கூடாதென்று அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களுக்கும் கட்டளையிட்டான். (இறைத்தூதர்) நூஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே அந்த இஸ்லாத்தையே உங்களுக்கும் மார்க்கமாக்கியிருக்கிறான்.
 
 (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும், (இறைத்தூதர்கள்) இப்றாஹீம், மூஸா, ஈஸா (ஆகியோர்க்கும் இறைக்கட்டளையாக) அறிவுறுத்தியதும், இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான்….. (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாவதும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதும் யாருக்கு பளுவாக இருக்கும்? அல்லாஹ்வே அதையும் தெளிவுபடுத்துகிறான்.
 
 இணை வைப்போரை (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.(அல்குர்ஆன் 42:;13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகி, இஸ்லாத்தை நிலைநாட்ட தனக்கு விருப்பமுள்ளவர்களை அல்லாஹ் அவன் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
 
 அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகாமல் இஸ்லாத்தை நிலைநாட்ட எவ்வித முயற்சியும் செய்யாத பெயர்தாங்கி முஸ்லிம்கள் 42:13-ல் இடம்பெற்றுள்ள மேற்கண்ட இறையுரையிலிருந்து அவசியம் படிப்பினைப் பெறக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில்

‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3)

‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19)

‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)

இது போன்ற பல வசனங்களில் தான் அங்கீகரித்துள்ள வாழ்க்கை வழிமுறைகளை மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக் கொள்ளும் அடியார்களுக்கு முஸ்லிம்கள் என்று அல்லாஹ்வே அழகிய பெயரிட்டுள்ளான்.

‘…..அவன்தான் (இதற்கு) முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்……” (அல்குர்ஆன் 22:78)

இன்னும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள் என்றும் நம்மை கருணையுடன் எச்சரிக்கின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3:102)

இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இஸ்லாம் எனும் அல்லாஹ்வின் மார்க்கம் பற்றியும் அதன்படி வாழ்ந்திட்ட நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைப் பற்றியும் நாம் ஒவ்வொருவரும் குர்ஆன் மூலமாக விள ங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையுள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் உண்மையில் அல்லாஹ்வின் மார்க்கத்தின்படி வாழ்கின்றோமா? என்று சுய பரி சோதனை செய்யத் தவறினால்! இன்னும் நாம் நல்லறங்களாக பிறர் சொல்லக் கேட்டு அல்லது பார்த்து செய்யும் அமல்கள் மார்க்கத்திற்குட்பட்டதா?  ரசூல்(ஸல்) அவர்களின் வழி முறையா? என்று சுய பரிசோதனை செய்யத் தவறினால், நாம் மறுமையில் நஷ்டமடைந்தவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்க நேரிடும். காரணம் அல்லாஹ் தன் கட்டளைகளையும் தன் தூதரையுமே பின்பற்ற எச்சரித்துள்ளான். நம் முன்னோர்களையோ, இவ்வுலகில் அறிஞர்கள், மேதைகள் என்று அழைக்கப்படுபவர்களையோ அல்ல.

இந்தக் கட்டளைகளை முறையே நாம் உணர்ந்து கொள்ளாத காரணத்தால் ரசூல் (ஸல்) அவர்கள் வழிகாட்டிய முஸ்லிம் சமுதாயம் இன்று பல பிரிவுகளாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இறக்கியருளிய குர்ஆன் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல், அதனை நம் வீட்டு அலங்காரப் பொருளாக ஆக்கிக் கொண்டதால் இந்த இழிநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.

முஸ்லிம்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் கண்களால் காண்பதையும், காண இயலாததையும், நம்மையும், இன்னும் எத்தனையோ படைப்புகளையும், பிரபஞ்சத்தையும், பிரமிக்க வைக்கும் சிறப்புடனும் நேர்த்தியுடனும் அல்லாஹ் படைத்துள்ளான். அத்தகைய ஆற்றல்மிக்க அவன் அருளிய மார்க்கத்தை பின்பற்றுவோர், இவ்வண்ணம் பல பிரிவுகளாக பிரிந்து சிறுமையடைய சாத்தியம் உண்டா? இல்லை.

முஸ்லிம்கள் தம் மார்க்கத்திற்கு சாட்சியாக இருக்கின்றார்கள் என்று அல்லாஹ் நம்மை தன் குர்ஆனில் பெருமைப்படுத்தியிருக்கும்போது அதற்கு தகுதியான நிலை நம்மிடையே உள்ளதா என்று சிந்திப்போமானால் நாம் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது புரியும். நாம் அறிந்தோ அறியாமலோ மத்ஹப், தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற பிரிவுகளைப் பின்பற்றி நம்மை ரசூல்(ஸல்) அவர்கள் நிலைநிறுத்திய ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து பிரித்துக் கொண்டதால் நாம் வழி தவறி விட்டோம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடம் நான் பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் ஹனஃபி யாக அல்லது ஷாஃபி, ஹம்பலி, மாலிக்கி, JAQH, TNTJ, ISM, IAC, IIM, அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, AQH, காதிரியா, ஷாதுலியா, நக்ஷபந்தியா, அகில இந்திய தௌஹீத் ஜமாஅத், ஒருங்கிணைந்த தௌஹீத் ஜமா அத் etc., etc..போன்ற அமைப்புகளின் கொள்கைகளை பின்பற்றிய முஸ்லிமாக வாழ்ந்தேன் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோமா? அல்லது, என் இறைவனே உன்னுடைய குர்ஆனையும் உன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றி உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிமாக என்னால் இயன்ற நல்லமல்களை செய்து வாழ்ந்திருந்தேன் என்று கூற விரும்புவோமா? சிந்தித்துப் பாருங்கள்.

முஹம்மது(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்களிடையே பொறாமை, பகைமை, நயவஞ்சகம், பதவி ஆசை, மார்க்கப்பற்றில் குறை போன்ற குணமுள்ள பலர் இருந்திருந்த போதிலும், இவை மனித வர்க்கத்தின் இயல்பு என்பதை உணர்ந்து அப்படிப்பட்டவர்களையும் அரவணைத்து ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாக பிரிவுகள் இல்லாமல் நபி(ஸல்) செயல்படுத்திக் காட்டினார்கள். மக்களிடையே நற்குணங்கள் வளர்வதற்கு அல்லாஹ்வைப் பற்றியும், மறுமை நாளைப் பற்றியும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவர்களாக இருந்தார்கள். இதுவே முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டலாக இருந்ததென்று குர்ஆனும் பல ஹதீசுகளும் எடுத்தியம்பும் உண்மை.

இன்று எத்தனையோ மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நல்லெண்ணத்தில் தங்கள் செயல்பாடுகளை ஆரம்பித்தாலும், ரசூல்(ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிகளில் தங்கள் மனோ இச்சைகளின்படி பல பெயர்களில் இயக்கங்களையும், கழகங்களையும், தொண்டு நிறுவனங்களையும் தோற்றுவித்து முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள். அவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் தானே சொல்கின்றார்கள் என்று நாமும் அவர்களுடன் அவர்களது கொள்கைகளை பின்பற்றியவர்களாக வாழ்கின்றோம். ஒவ்வொரு முஹல்லாவிலும் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக இருப்பதன் காரணம் நாம் ரசூல்(ஸல்) அவர்கள் பெயரிட்டு வலியுறுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற கூட்டமைப்பு முறையை பின்பற்றத் தவறியதேயாகும்.

‘என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்.

நாம் மீண்டும் ஒன்றுபட்ட சமுதாயமாக மாற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உள்ளது. அது, ஸஹீஹான ஹதீசாக புகாரி ஆங்கில மொழிபெயர்ப்பு 4: 803, 9: 206

நம்;மிடையே மார்க்கத்தை சரிவர அறியாதோரும், மார்க்க கடமைகளில் குறைவுள்ளோரும் இருப்பின் அவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்ட சுன்னத் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் என்பன போன்ற பிரிவுப் பெயர்களால் நம்மை வேறுபடுத்திக் கொள்ளாமல் ஒரே ஜமாஅத்தாக இருந்து நமக்குள் மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து கொண்டும் வாழ வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறை.

ஒவ்வொரு முஹல்லாவாசிகளின் நலனுக்காக மார்க்கப்பணிகள், இறையில்லம் பராமரிப்பு, வாழும் இடங்களின் வளர்ச்சிப் பணிகள், சமுதாய சிறார்களின் மார்க்கம் மற்றும் உலகக் கல்வி வளர்ச்சி சார்ந்த பணிகள், பைத்துல்மால் அமைத்து முறையே ஸக்காத் வசூல் செய்து உரியவர்களுக்கு கொடுத்துதவும் பணிகள் இது போன்ற மார்க்கம் அனுமதித்துள்ள எல்லாப் பணிகளையும் அழகிய முறையில் நிறைவேற்ற இயலும்.

அதை விடுத்து, ஓரு முஹல்லாவில் பல இயக்கங்களை பின்பற்றுவோரும், பல பெயர்களில் தொண்டு நிறுவனங்களும் இருப்பின் அங்கே பல கொள்கைகளை பல தலைவர்களை பின்பற்றும் நிலை ஏற்பட்டு ஜமாஅத் ஒற்றுமைக்கு வழியில்லாது போகும். அல்லாஹ்வின் நல்லடியார்களே இங்கு கூறப்பட்டிருப்பது சத்தியத்தை எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதாலும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது பலர் விளங்கிக் கொண்டிருப்பது போல் தனி பிரிவு அல்ல” அது தனி மனித சொத்து அல்ல” முஸ்லிம்கள் ஒற்றுமை யுடன் வாழ்வதற்கு அல்லாஹ் தன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் செயல்முறை மூலம் நமக்கு காட்டித்தந்துள்ள மிகச் சிறந்த வழிமுறையே என்பதை விளக்கவேயாகும்.

இதனை சற்று சிரமப்பட்டு படித்துணருங்கள். மார்க்கத்தை நாம் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நாமே நஷ்டமடைந்தவர்களாவோம். நமது செயல்களுக்கு மறுமை நாளில் நம்மிடமே கேள்வி கணக்கு கேட்கப்படும்”  நாம் பின்பற்றும் அறிஞர்களிடமோ தலைவர்களிடமோ அல்ல.

ஒவ்வொரு காலத்திலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு (Public Awareness) காரணமாகவே அவர்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன. அதுபோல் மார்க்க விழிப்புணர்வு பெற ஒவ்வொருவரும் குர்ஆனை பொருள் உணர்ந்து படியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பிறப்பித்திருக்கும்; கட்டளைகளை புரிந்து கொள்ளுங்கள். நபிவழியை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளுங்கள். மார்க்க அறிஞர்கள் கூறும் அறிவுரைகளை கண்மூடி பின்பற்றாமல் அவர்கள் கூறியது உண்மையா என்பதை தனியாகவோ, கூட்டாகவோ குர்ஆனில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.

இப்போதுள்ள இயக்க, கழக, கொள்கைத் தலைவர்கள் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையை உண்மையில் விரும்புபவர்களாக இருந்திருந்தால் தங்களின் வேறுபட்ட நிலைகளுக்கு ஹதீஸ்களை ஆதாரம் காட்டும் அவர்கள், ஸஹீஹான ஹதீஸாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிச் சென்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் மார்க்கப் பணி என்று மக்களிடம் பணம் வசூல் செய்வது, பள்ளிகள் கட்டுகிறோம் என்று வசூல் செய்து இயக்க கொள்கைப் பள்ளிகளாக ஆக்கிக் கொள்வது, இது எங்கள் கொள்கைப்பள்ளி உங்கள் பள்ளியல்ல என்று சண்டையிட்டுக் கொண்டு மாற்று மத சமூகத்திற்கு முஸ்லிம்களை கேலிக்கூத் தாக்குவது, இஸ்லாமிய ஆண்களையும் பெண்களையும் சாலை மறியல், பந்த் போன்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திராத வழிகளில் போராடத் தூண்டுவது போன்ற பணிகள் தான்.

அறிஞர்கள், தலைவர்கள் ஒன்றுபடுவார்கள் என்று நாம் காத்திருந்து நம்மை மரணம் முந்திக் கொண்டால் நம் நிலை என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பின் பற்றும் பிரிவுகளை விட்டு முற்றிலும் விலகி  நபி(ஸல்) அவர்களின் வழியில் ஒன்றுபடுங்கள். நம் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

‘அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ் வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே என்று கதறுவார்கள்.

மேலும் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம்” ஆகவே அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்.

ஆகவே எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும் பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கதறுவார்கள்) (அல்குர்ஆன் 33:66,67,68)

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அல்லாஹ் நம்மை அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தின்படி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழச் செய்து ஈருலக வெற்றியை நல்கு வானாக. ஆமீன்.

 கோஷ்டி மனப்பான்மை

Post image for கோஷ்டி மனப்பான்மை

முஸ்லிம்  சமுதாயம்  பேச்சளவில்  ஒரே  உம்மத்  எனும்  சமுதாயத்தவராகவே  இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை துண்டு துண்டாக்கிப் போட்டுவிட்டார்கள்.

    சண்டை போடுகிற போட வைக்கின்றவர்களின் உள்ளம் இதிலும் அமைதி அடையாத போது, சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் ஒருவனை மற்றவன் காஃபிர் என்றும் பாவி என்றும் வழிகெட்டவன் என்றும் அழைக்க ஆரம்பிக்கிறான். கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து போகிறார்கள். தனிக்குழு அமைக்கிறார்கள். தமது தொழுகையையும், பள்ளிவாசல்களையும்  தனியாக்கிக் கொள்கிறார்கள். ஒரு சாரார்  மறுசாராருடன் கலந்து  பழகுவது, மற்ற  வகையில் தொடர்பு வைப்பது அனைத்தையும் தடை செய்து விடுகிறார்கள். தாம் தனிப்பட்டதொரு சமுதாயம் என்பதுபோல் அவர்கள் தமது மத்ஹபுக்கென்று வழிமுறைக்கென்று தனிக்குழு அமைத்துக் கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உங்களால் கணக்கிட முடியாது.

   ஆனால், உண்மையில் இப்படி கோஷ்டிகள் அமைந்த காரணத்தால் இந்தச் சமுதாயம் நூற்றுக்கணக்கான துண்டுகளாகி விட்டது; மேலும் சிதறிக் கொண்டிருக்கிறது. மிகக் கொடுமையான துன்பங்கள் சூழ்ந்திருக்கிற இந்த நேரத்தில் அவர்களால் ஒன்று சேர்ந்து நிற்க முடியவில்லை! ஒரு பிரிவில் இருக்கிற முஸ்லிம்கள் மற்றொரு  பிரிவினர் மீது  வெறுப்புக் கொள்கிறார்கள். இன்னும்  சொல்லப்போனால்  அதைவிட  அதிகமாகவே வெறுப்புக் கொள்கிறார்கள். ஒரு சாரார் மறு சாராரைத் தாழ்த்தும் எண்ணத்தினால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.

   இந்தச் சூழலில் முஸ்லிம்களைத் தாழ்ந்தவர்களாகவும், இழிந்தவர்களாகவும் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அது அவர்கள் கைகளாலேயே சம்பாதித்துக் கொண்டதுதான்! இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு இருக்கின்ற தண்டனை அவர்கள் மீது இறங்கியிருக்கிறது.

“உங்களை பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் ஆற்றலுள்ளவன்” (6:65)

மேற்குறிப்பிட்ட பிரிவினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கிற இந்தத்  தண்டனையிலிருந்து  விடுதலை  பெறவே முடியாது!  எனவே  நீங்கள் தாமதம் எதுவுமின்றி அந்தப் பிரிவினைகளை விட்டொழியுங்கள்! ஒருவருக்கொருவர் சகோதரராய் ஆகிவிடுங்கள்;  ஒரே சமுதாயமாய் ஆகி விடுங்கள். இறை மார்க்கத்தின் அடிப்படையில் அஹ்ல ஹதீஸ், ஜாக்ஹ், தவ்ஹீ ஜமாஅத், ஹனபி, ஷாபி, தேவ்பந்தீ, பரேலவி, ஷியா, ஸன்னி எனும் வகையில் தனிதனிக் குழுக்கள் உருவாக முடியாது. இந்தக் குழுக்கள் எல்லாம் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டவை. இறைவன் தனது உம்மத்தாக ‘இஸ்லாமிய சமுதாயம்’ என ஒரே ஒரு சமுதாயத்தைதான் அமைத்திருக்கிறான்.

    எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே இக்குழுக்களை நம்பி செயல்படுவதை கைவிடுங்கள். இந்த நிலையில் இந்திய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தக்க கவனம் செலுத்தி குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை எடுத்து நடக்க முற்படாவிட்டால் இன்னும் பல தீய விளைவுகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையை நம்மால் மறைக்க முடியாது.

பிரிவினை

Post image for பிரிவினை

நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான்.

      مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ  எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)

    மிகச் சாதாரண அளவில் தானும் முஸ்லிம்களுக்கிடையில் ஜக்கியமினை நிலவுவதற்கு எதிராக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

    ஒரு முறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் ‘ஓ’ அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் ‘ஓ’ முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் “ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!” எனக் கேட்டார்கள்.”அவர்களுக்கிடையில் என்ன தகராறு?” என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ‘இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

    இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.

        ஆனால் நாம்  இன்று  ஜமாஅத்துகளாகவும்  ஹிஸ்புகளாகவும்,   ஹரகா(இயக்கங்கள்)களாகவும்  பிரிந்து  போயுள்ளோம். “இது எமது இயக்கம்” “எமது தலைவர்” எனும்போது இயக்க அங்கத்துவமானது நமது விசுவாசத்தை விட பலம் மிக்கதாக இருக்கிறது.

    ஆகவே உண்மையான இஸ்லாமிய சகோதரத்துவத்தை அழிக்கும் பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு நாம் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுகிறோம். அல்லாஹ்வை பயப்படுவதைவிட இயக்கங்கள், பிரிவுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது ஆரோக்கியமானதல்ல.

    பிரிவினை என்ற பாவத்துக்குள் வீழ்ந்தவர்களுக்கு நாம் தரும் அறிவுரை: உங்கள் தலைவர்களின் கூற்றைக் கொண்டு குர்ஆன் சுன்னாவை அளக்காமல் குர்ஆன் சுன்னாவைக் கொண்டு உங்கள் தலைவர்களின் வார்த்தைகளை அளந்து கொள்ளுங்கள்.

    “யாரொருவர் ஒரு பிரிவின் கீழ் இருந்து அதற்காகப் போராடி அதன் நிமித்தமாகவே கோபமுற்று அதற்காக அழைப்பு விடுத்து அதற்கு உதவி செய்துவரும் வேளையில் கொல்லப்படுகிறாரோ அவர் ஜாஹிலியாவிலேயே மரணக்கிறார்” என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (நூல்: சுனன் நஸயீ)

அல்ஹிதாயா மாத இதழ் மே-2000

முஸ்லிம்களே ஒன்று படுவீர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s